காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு வெயிலில் வாடும் பஸ் பயணியர்

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இருந்த நிழற்குடையின் இரும்பு துாண், 2016 வர்தா புயலின் போது லேசாக சாய்ந்தது.

கடந்த 2021ம் ஆண்டு இறுதியில், புதிய நிழற் கூரை அமைப்பதற்காக, சாய்ந்திருந்த நிழற்கூரை முற்றிலும் அகற்றப்பட்டது.

அதன்பின் நடைமுறை சிக்கல்கள் காரணமாக, நிழற்கூரை அமைக்கவில்லை. இதனால், சிறிய பகுதிக்கு மட்டும் நிழல் தரும் வகையில், இரு துணியிலான பந்தல்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய நிழற்கூரை அமைக்க கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான பணிகள் துவங்கப்பட இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், 21ம் தேதி, கலெக்டர் பிரதாப், கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பேருந்து நிலைய வளாகத்தை ஒட்டி, சாலையோர வியபாரிகளுக்கான கடைகள் அமைக்கும் பணி நடந்து வந்தது. அதை ஆய்வு செய்த கலெக்டர், பயணியருக்கு நிழற்கூரை அமைக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதன்பின், உடனடியாகதிட்டம் வகுத்து, பணிகளை துவக்கி முடிக்க வேண்டும்என, கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். கலெக்டர் உத்தரவை அலட்சியம் செய்யும் வகையில், தற்போது வரை பேரூராட்சி நிர்வாகம், பேருந்து நிலைய நிழற்கூரை பணிகளை மேற்கொள்ளவில்லை.

பேரூராட்சி அலுவலர் கூறுகையில், 'மாற்று திட்டம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் கலெக்டரை சந்திந்து ஒப்புதல் பெற்று பணிகளை மேற்கொள்வோம்' என தெரிவித்தார்.

Advertisement