சாலையோரத்தில் மருத்துவக் கழிவை கொட்டி எரிப்பதால் சுகாதார சீர்கேடு

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் கிராமத்தில், கால பைரவர் கோவில் மலை உள்ளது. இந்த மலையையொட்டி செல்லும் சாலையானது, திருமுக்கூடல் சாலையை இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளது.
இந்த சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் சாலவாக்கத்தில் உள்ள பள்ளி, பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இச்சாலையையொட்டி, பயன்படுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டில்கள், சிரஞ்ச், மாஸ்க், கிளவுஸ் ஆகிய மருத்துவக்கழிவை மர்ம நபர்கள் கொட்டிச் செல்கின்றனர்.
அவ்வப்போது கொட்டப்படும் மருத்துவக் கழிவை தீயிட்டு கொளுத்தியும் வருவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, சாலையோரத்தில் மருத்துவக்கழிவு கொட்டுவோர் மீது, நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.