அரக்கோணம் - கடப்பா ரயில் திடீர் பழுதால் பயணியர் அவதி

திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து திருத்தணி, பொன்பாடி, நகரி, ரேணிகுண்டா வழியாக, கடப்பா ரயில் நிலையம் வரை, பயணியர் ரயில் தினமும் இயக்கப்படுகிறது.

இதில், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள், வியாபாரிகள், திருப்பதி திருமலைக்கு செல்லும் பக்தர்கள் என, பலதரப்பினர் பயணம் செய்கின்றனர்.

நேற்று காலை 7:00 மணிக்கு, அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணியர் ரயில், காலை 7:25 மணிக்கு திருத்தணிக்கு வந்தது. பின், ரயிலை இயக்க முயன்றபோது, பிரேக் பழுதானது தெரியவந்தது.

இதையடுத்து, திருத்தணி ரயில் நிலைய மேலாளர் மற்றும் ஊழியர்கள், அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்களை வரவழைத்து, ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் பிரேக்கை சரிசெய்தனர்.

தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு, திருத்தணியில் இருந்து கடப்பாவுக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால், பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Advertisement