ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்த வாலிபர் யார்?

பல்லடம்: பல்லடம், பனப்பாளையம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்., ஒன்றில், நேற்று முன் தினம் இரவு, 11:10க்கு, வாலிபர் ஒருவர் உள்ளே நுழைந்தார்.

'சிசிடிவி' கேமரா முன், தனது இரண்டு கைகளை நீட்டியபடி, தனது பெயர் மணி என்று கூறி, ஏ.டி.எம்.,-ல் உள்ள பட்டன்களை தாறுமாறாக அழுத்தினார். வெளியே சென்று விட்டு மீண்டும் உள்ளே வந்து இயந்திரத்தை பலமுறை காலால் எட்டி உதைத்தார்.

மீண்டும் வெளியே சென்று விட்டு, சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த அந்த வாலிபர், கையில் எடுத்த வந்த கல்லால், ஏ.டி.எம்., கணினி திரையை உடைக்க முயன்றார். ஐந்து நிமிடங்கள் நடந்த இவரது செயல்கள் அனைத்தும், ஏ.டி.எம்., 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது.

போலீசார் கூறுகையில், 'ஏ.டி.எம்.,ல் நுழைந்த வாலிபர் மது போதையில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஏ.டி.எம்.,ஐ உடைத்து பணத்தை எடுப்பதற்காக அவர் வந்ததாக தெரியவில்லை. போதையில் இவ்வாறு செய்தாரா; அல்லது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் உள்ளன. இவர் யார்? எந்த ஊர் என்பது தெரியவில்லை. அவரை தேடி வருகிறோம்,' என்றனர்.

Advertisement