ஊரக வளர்ச்சித்துறையில் மார்ச் 13ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்

மதுரை : உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்கு வட்டார, மாவட்ட, மாநில அளவில் நிரந்தர கட்டமைப்பை ஏற்படுத்துவது உட்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வளர்ச்சித்துறை அலுவலர்கள் மார்ச் 13ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது: ஊரக வளர்ச்சித் துறையில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாண்டுகளாக போராடுகிறோம். தீர்வு கிடைக்காத நிலையில் நாளை மறுநாள் (மார்ச் 13) மாநில அளவில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய உரிமைகளை வழங்க வேண்டும். நுாறுநாள் வேலைவாய்ப்பு திட்ட கணினி உதவியாளர்கள், எஸ்.பி.எம்., திட்ட ஒருங்கிணைப்பாளரை பணி வரன்முறைப்படுத்த வேண்டும். நுாறுநாள் வேலை திட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து வீடு கட்டும் திட்டங்களுக்கும் பணியிடம் ஏற்படுத்த வேண்டும். பதவி உயர்வு வழங்குவதில் இயக்குநர் அலுவலகம், தலைமைச் செயலகத்தில் ஏற்படும் தாமதத்தை கைவிட வேண்டும். வளர்ச்சித் துறை ஊழியர் மீது திணிக்கப்படும் பிறதுறை பணிகளை கைவிட வேண்டும்.

ஊராட்சிகளை பேரூராட்சி, நகராட்சிகளாக தரம் உயர்த்துவதை ரத்து செய்வதுடன், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

பணிக்கிடையில் இறந்த ஊழியர்களின் குடும்பங்களை பாதுகாக்க கருணை அடிப்படை நியமனங்களை 5 சதவீதத்தில் இருந்து, முன்பிருந்தது போல 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். இவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement