அரசு பஸ்களில் இனி இருக்காது சில்லரை பிரச்னை! 'ஸ்வைப்பிங் மெஷின்' வருகிறது

1

கோவை; அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகள் இனி, டிக்கெட் கட்டணம் செலுத்த க்யூ.ஆர் கோடு, ஏ.டி.எம்., கார்டு வாயிலாக பணம் செலுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்களை, நவீன தொழில்நுட்ப உதவியுடன், சேவைகளை எளிமைப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர பஸ்களின் வருகை குறித்து அறிய, 'பஸ்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், பஸ் எந்த சாலையில் வந்து கொண்டிருக்கிறது என்பதை, பஸ்சில் பொருத்தியுள்ள, ஜி.பி.ஆர்.எஸ்.,கருவி வாயிலாக, அறிந்து கொள்ள முடியும்.

இதன் தொடர்ச்சியாக, 'டிஜிட்டல்' சேவைகளை கோவை பயணிகளுக்கு வழங்க, அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, க்யூ.ஆர்., கோடு வசதி மற்றும் ஏ.டி.எம்., கார்டு வாயிலாக டிக்கெட் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இதற்கான 'டிஜிட்டல்' கருவி, 100 சதவீதம் பெறப்பட்டுள்ள நிலையில், வங்கியுடன் அவற்றை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மட்டும், நிலுவையில் உள்ளன.

அதை முடித்து விட்டால், டிஜிட்டல் பரிவர்த்தனை நடைமுறை பஸ்களில் துவங்கப்படும் என, கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறினார்.

அவர் கூறியதாவது:

பல்வேறு பகுதிகளிலும், இன்று கட்டணம் செலுத்த க்யூ.ஆர்., கோடு நடைமுறை, ஏ.டி.எம்., கார்டு 'ஸ்வைப்பிங்' எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மக்கள் எளிதில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்த நடைமுறையையே, அரசு பஸ்களிலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக சில்லரை பிரச்னை தீரும். பயணிகள் பாக்கிக்காக காத்திருக்கும் நிலையும் இருக்காது. பயணிகள், கண்டக்டர்கள் இடையேயான பிரச்னை தீரும்.

அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்து விட்டன. 'ஸ்வைப்பிங்' எந்திரங்களை வங்கிகளுடன் இணைத்து, அவற்றில் செலுத்தப்படும் டிக்கெட் கட்டணத்தை, அரசு போக்குவரத்துக்கழக வங்கிக்கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

அதற்கான பணியும் இரு மாதங்களுக்குள் முடிந்து விடும். இந்நடைமுறையை, அனைத்து டவுன் பஸ்களிலும் மிக எளிதாக பயன்படுத்த முடியும். கண்டக்டர்களின் பணியும் எளிதாகும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement