மொரீஷியஸ் உடன் கையெழுத்தானது 8 ஒப்பந்தங்கள்; 'மகாசாகர்' திட்டத்தை அறிவித்தார் மோடி

போர்ட் லுாயிஸ், இந்தியா - மொரீஷியஸ் இடையே எட்டு ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று கையெழுத்தாகின. கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்றார். இரண்டு நாள் பயணமாக அங்கு சென்ற மோடி, தலைநகர் போர்ட் லுாயிசில் நடந்த நிகழ்ச்சியில் மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்துடன் பங்கேற்றார்.
கடல் சார் பாதுகாப்பு, தரவுகள் பகிர்தல், அந்தந்த நாட்டின் கரன்சியை பயன்படுத்தி வர்த்தகம் செய்தல், பண மோசடி தடுப்பில் ஒத்துழைப்பு, தொழில்நுட்ப கூட்டுறவு உள்ளிட்ட விஷயங்களில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அவை அனைத்தையும் விட முக்கியமானது, பாதுகாப்பு விஷயத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான உடன்பாடு.
மோடி பிரதமரான மறு ஆண்டில், 'சாகர்' என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகள் தங்களது பொருளாதார முன்னேற்றத்துக்காக இணைந்து செயல்படுவது அந்த திட்டத்தின் குறிக்கோள்.
பத்தாண்டுகளுக்கு பிறகு இப்போது அந்த திட்டத்துக்கு, 'மகாசாகர்' என்று புது பெயர் சூட்டி அறிமுகம் செய்திருக்கிறார் மோடி.
முக்கியத்துவம்
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகள், பொருளாதார முன்னேற்றத்துக்காக மட்டுமின்றி, பாதுகாப்புக்காகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை மகாசாகர் வலியுறுத்துகிறது.
இது, மொரீஷியஸ் நாட்டுடன் முன் எப்போதும் இல்லாத ஒரு நெருக்கத்தை உருவாக்கும் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
உலகம் முழுதும் தன் கடற்படை வலிமையை பெருக்கி வரும் சீனா, இந்திய பெருங்கடலில் உள்ள நாடுகளையும் தன் வலைக்குள் இழுக்க தீவிரமாக முயற்சி செய்கிறது.
அந்த பின்னணியில் பார்க்கும்போது, மொரீஷியசை சீன வலையில் விழாமல் தடுத்து காப்பாற்றும் பொறுப்பை இந்தியா இந்த உடன்பாடு வாயிலாக ஏற்றுக் கொண்டிருப்பதாக கருதலாம்.
தீவுகள் நிறைந்த சின்னஞ்சிறு நாடு மொரீஷியஸ். ஆனால், இந்திய பெருங்கடலில், ஆப்ரிக்காவின் தென் பகுதிக்கு நெருக்கமாக அமைந்திருப்பதாலும், ஒரு நேர்கோட்டில் இந்தியாவை இணைக்கும் அளவுக்கு வசதியான கடல் பாதையில் அமைந்திருப்பதாலும், ராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மதிக்கப்படுகிறது.
சாகோஸ் தீவுகள்
இந்திரா பிரதமராக இருந்தபோது, மொரீஷியசில் வாழும் இந்திய வம்சாவளியினர் ஆட்சிக்கு எதிரான புரட்சி முயற்சியை முறியடிக்க, இந்திய ராணுவத்தையும் கடற்படையையும் அனுப்ப இருந்தார்.
'ஐந்து மணி நேரத்தில் என் படைகள் உங்கள் நாட்டில் தரையிறங்கும்' என அப்போதைய மொரீஷியஸ் பிரதமருக்கு இந்திரா உறுதி அளித்தார்.
நம் தளபதிகளின், 'ஈகோ' மோதலால் அந்த ஆப்பரேஷன் நடக்காமலே போனது வேறு விஷயம்.
மொரீஷியஸ் 1968ல் சுதந்திரம் பெற்றபோது, சாகோஸ் என்ற 60 தீவுகள் கொண்ட நிலப்பரப்பை பிரிட்டன் தன் வசம் வைத்துக் கொண்டது. அமெரிக்காவுக்கு அதை நீண்டகால குத்தைக்கு விட்டது.
இரு நாடுகளும் சேர்ந்து டீகோ கார்சியா கடற்படை தளத்தை அமைத்துள்ளன. சாகோஸ் தீவுகளை திருப்பி தருமாறு பிரிட்டனிடம் மொரீஷியஸ் கேட்டு வருகிறது.
அதற்கு இதுவரை ஆதரவு அளித்த இந்தியா, அமெரிக்க கடற்படை தளம் தொடர்ந்து அங்கே இருந்தால் தான், சீனாவின் ஆதிக்கம் எல்லைமீறாமல் தடுக்க முடியும் என்ற வகையில் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
பலம் சேர்க்கும்
நேற்று கையெழுத்தான ஒப்பந்தங்களிலோ, தலைவர்களின் பேட்டிகளிலோ ராணுவ ரீதியான இந்த விஷயங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
எனினும், சீனாவின் அசுர வளர்ச்சி உலகத்துக்கு நல்லதல்ல என்று நம்பும் மேலை நாடுகளின் எதிர்கால திட்டங்களுக்கு மோடியின் நடவடிக்கை பலம் சேர்க்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மற்றபடி, 100 கோடி ரூபாயில் இந்தியாவின் உதவியுடன் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மொரீஷியசில் செயல்படுத்தப்படும்; புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்ட இந்தியா உதவும்; அதன் கடலோர காவல்படைக்கு பயிற்சி அளிக்கும் என்பதை போன்ற சம்பிரதாயமான உறுதிகளும் வழங்கப்பட்டன.
மொரீஷியஸ் சுதந்திர தின விழாவில், இந்திய கடற்படையின் போர்க்கப்பல் மற்றும் இந்திய விமானப்படையின் ஆகாஷ் கங்கா ஸ்கைடைவிங் குழுவும், ஆயுதப்படைகளின் குழுவும் பங்கேற்றன.
என்னென்னஒப்பந்தங்கள்?
மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய, 'தி கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்ட் கீ ஆப் தி இந்தியன் ஓஷன்' என்ற விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்கப்பட்டது. இந்தியா, மொரீஷியஸ் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் ஆற்றிய பெரும் பங்குக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
1மொரீஷியஸ் மத்திய வங்கி - இந்திய ரிசர்வ் வங்கி இடையே உள்ளூர் நாணய தீர்வு முறை
2மத்திய நீர் ஆணையத்தின் குழாய் மாற்று திட்டத்திற்கு நிதியளிக்க மொரீஷியஸ் அரசு - இந்திய ஸ்டேட் வங்கி இடையே கடன் வசதி
3இந்திய வெளியுறவு அமைச்சகம் - மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சகம் இடையே பயிற்சி
4இந்திய கடற்படை - மொரீஷியஸ் கடற் படை இடையே கப்பல் போக்குவரத்து தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் தொழில்நுட்பம்
5மொரீஷியஸ் நிதி குற்றவியல் ஆணையம் - இந்தியாவின் அமலாக்க இயக்குநரகம் இடையே ஒத்துழைப்பு
6மொரீஷியஸ் தொழில் மற்றும் கூட்டுறவு அமைச்சகம் - இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகம் இடையே புரிந்துணர்வு
7மொரீஷியஸ் பொது சேவை அமைச்சகம் - இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையம் இடையே அதிகாரிகளுக்கு பயிற்சி
8இந்தியாவின் தேசிய கடல் தகவல் சேவை மையம் - மொரீஷியஸ் கடல்சார் மண்டல நிர்வாகம் மற்றும் ஆய்வுத் துறைக்கு இடையே ஒத்துழைப்பு.
மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய, 'தி கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்ட் கீ ஆப் தி இந்தியன் ஓஷன்' என்ற விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்கப்பட்டது. இந்தியா, மொரீஷியஸ் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் ஆற்றிய பெரும் பங்குக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
மேலும்
-
ஆம் ஆத்மி ஆட்சியில் மோசடி விசாரிக்க ஜனாதிபதி ஒப்புதல்
-
காந்திகிராம பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு * கியூட் தேர்வுக்கு மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்
-
பிளஸ் 2 வகுப்பு ஹிந்தி தேர்வு மறுவாய்ப்பு தர சி.பி.எஸ்.இ., முடிவு
-
தங்க கடத்தலில் அரசு ஊழியர்கள் தொடர்பு சி.பி.ஐ., விசாரணையை துவக்கியது
-
செங்குத்தாக கவிழ்ந்த கேரளா பஸ்
-
வெட்டப்பட்ட மாணவருக்கு திருமாவளவன் ஆறுதல்