ஆம் ஆத்மி ஆட்சியில் மோசடி விசாரிக்க ஜனாதிபதி ஒப்புதல்

புதுடில்லி, டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது, பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதில், 2,000 கோடி ரூபாய் மோசடி நடந்தது தொடர்பாக, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

டில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி இங்கு ஆட்சியில் இருந்தது.

முதல்வராக இருந்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது ஏற்கனவே மதுபான ஊழல் வழக்கு உள்ளது.

அதுபோல் அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் மீதும் சில வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், டில்லியில் அரசு பள்ளிகள் கட்டுவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு, 2020ல் அறிக்கை வெளியிட்டது.

இதன் அடிப்படையில், டில்லி அரசின் ஊழல் கண்காணிப்பு பிரிவு விசாரித்து, 2022ல் தலைமைச் செயலருக்கு அனுப்பிய அறிக்கையிலும் இது உறுதி செய்யப்பட்டது.

பள்ளிகள் கட்டுவதில், 2,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்த வழக்கில், மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க ஜனாதிபதியின் ஒப்புதல் கோரப்பட்டது.

அதையேற்று, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertisement