சார்பதிவாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை

திண்டுக்கல்:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் சார்பதிவாளரின் திண்டுக்கல் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் கொல்லப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி. இவர் 2023ல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சார் பதிவாளராக பணியாற்றினார். அப்போது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் 2020 முதல் 2023 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சாந்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

அதை தொடர்ந்து அவர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாறுதலாகி சென்றார். இந்த வழக்கு கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழைய கரூர் ரோடு குரு நகர், சீலப்பாடி, கொல்லப்பட்டி பகுதியில் சாந்திக்கு வீடுகளும், சொத்துகளும் இருப்பது தெரிந்தது.

கோவை போலீசார் திண்டுக்கல், தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரை தொடர்பு கொண்டு சாந்திக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்த உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்று திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன், இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் சார்பதிவாளர் சாந்திக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை கோவைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement