கூட்டுறவு பணியாளருக்கு நாளை குறைகேட்பு முகாம்

திருப்பூர்; கூட்டுறவு பணியாளர் குறைகேட்பு கூட்டம், நாளை (14ம் தேதி) நடைபெற உள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பிரபு அறிக்கை:

கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர் நலன் கருதி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், திருப்பூர் மண்டலத்திலுள்ள கூட்டுறவு பணியாளர்களுக்கான குறைகேட்பு கூட்டம், வரும் 14 ம் தேதி நடைபெற உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில், 4 வது தளம், அறை எண், 407 ல் அமைந்துள்ள மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில், காலை, 10:30 மணிக்கு நடைபெறும்.

கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோர், ஓய்வு பெற்றவர்கள், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டோர் தங்கள் குறைகளை மனுவாக அளிக்கலாம். கோரிக்கைகள், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement