பொங்கல் சுற்றுலா பொருட்காட்சி விமான ஓடுபாதை விரிவாக்க ரூ.20 கோடி

பட்ஜெட்டில் சுற்றுலா துறையின் முக்கிய அறிவிப்புகள்:

புதுச்சேரி மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தில், பல்நோக்கு சுற்றுலா அம்சங்களுடன் நிறைந்த மண்டலம் உருவாக்க அனைத்து முயற்சிகளும், அரசால் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் அரசு, தனியார் பங்களிப்புடன் தீம் பூங்காக்கள், ஓய்வு விடுதிகள், மாநாட்டுக் கூடங்கள், நல மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஆலங்குப்பம் ஏரியை மேம்படுத்தும் பணி முதன்மை திட்டத்தில் சேர்க்கப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து சுற்றுலா அமைச்சக ஒப்புதல் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும். டி.ஆர்.பட்டினம் ஆறு மற்றும் முகத்துவாரத்தில் சாகச சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தாண்டு சாகச விளையாட்டு, உணவுத் திருவிழா, கடற்கரை திருவிழா, காரைக்கால் கார்னிவல், புத்தாண்டு கொண்டாட்டம், பிரெஞ்சு துாதரகத்துடன் இணைந்து பிரெஞ்சு திருவிழா கொண்டாடப்படும்.

தேசிய சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில், மாகி மற்றும் ஏனாம் பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா மேற்கொள்ளப்படும். வரும் நிதியாண்டு முதல் பொங்கல் சுற்றுலா பொருட்காட்சி புதுச்சேரியில் பிரம்மாண்டமாக நடத்தப்படும்.

புதுச்சேரியில் அமைந்துள்ள விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்துவதற்காக, நிலம் கையகப்படுத்த, முதற்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement