குற்றத்தடுப்பு நடவடிக்கை; மாவட்ட போலீசார் தகவல்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: அவிநாசி, துலுக்கமுத்துாரை சேர்ந்த தம்பதி பழனிசாமி - பர்வதம் வீட்டில் கொலை செய்யப்பட்டனர். விசாரணையில் நீண்ட நாட்களாக நடந்து வந்த குடும்ப தகராறின் காரணமாக, உறவினரும், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரால் கொலை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வழக்கில் தொடர்புடைய நபர் சாலை விபத்தில் சிக்கி, தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கின் விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, பல்லடம் அருகே நான்கு பேர் கொல்லப்பட்ட வழக்கில், வழக்கு விசாரணை செய்யப்பட்டு கடந்த ஆண்டு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று தரப்பட்டது.

கடந்த நவ., மாதம் அவிநாசிபாளையம், சேமலைக்கவுண்டம் பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில், தீவிர விசாரணை நடக்கிறது. எஸ்.பி., தலைமையில், எட்டு சிறப்பு குழுக்கள் வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

14 ஆயிரம் கேமரா



குற்றத்தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட போலீசாரால், மாவட்டம் முழுவதும், 14 ஆயிரம் 'சிசிடிவி' கேமரா நிறுவப்பட்டுள்ளன. 5,012 கேமராக்கள் குடியிருப்பு பகுதிகளில் மற்றும் தோட்ட வீடுகள் உள்ள பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.

குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் குடியிருப்பு, தோட்ட வீடுகள் இருக்கும் பகுதியில் கண்காணிக்க காங்கயம், பல்லடத்தில், 25 துப்பாக்கி ஏந்திய டூவீலர் ரோந்து குழுக்கள் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement