யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தேளூர் கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
திருவாடானை அருகே தேளூர் குடியிருப்பை சேர்ந்த பெண்கள் நேற்று திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலவலகம் முன்பு காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம் நடத்தினர். கிராமத்தை சேர்ந்த தென்னரசி கூறியதாவது:
பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் தெருக்குழாய்களில் சொட்டு சொட்டாக வடியும் நீரை பிடிப்பதற்குள் நின்று விடுகிறது.
இதனால் அனைத்து குடும்பத்தினரும் பயன் பெறும் வகையில் குடிநீர் கிடைப்பதில்லை. குடம் தண்ணீர் ரூ.15க்கு வாங்கி பயன்படுத்துகிறோம். தண்ணீரை விலைக்கு வாங்க முடியாமல் கூலித் தொழிலாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
எனவே அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினோம் என்றனர். அதனை தொடர்ந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என அலுவலர்கள் தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.