மதுரை நகரில் விபத்து, பலி எண்ணிக்கை குறைந்தது

மதுரை: மதுரை நகரில் விபத்து அபாயம் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் விபத்தும், பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
சாலை விபத்துகளில் இந்தியா அளவில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது. மதுரை நகரில் போக்குவரத்து விதிமீறல், குறுகலான, மோசமான ரோடுகளால் தினமும் விபத்து நடக்கிறது. வாரத்திற்கு குறைந்தது 3 பேராவது விபத்தில் சிக்குகின்றனர். சிலர் இறந்தும் விடுகின்றனர். தொடர் விபத்து நடக்கும் வில்லாபுரம் உட்பட 76 இடங்கள் கண்டறியப்பட்டு, தடுப்புகள், ஒருவழிப்பாதை, வர்ணம் பூசுதல், எச்சரிக்கை விளக்கு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன்காரணமாக முந்தைய ஆண்டுகளைவிட 2024ல் 26 இறப்புகள், 88 விபத்துகள் என மொத்தம் 114 விபத்துகள் குறைந்தன. அதேசமயம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 4.83 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போலீஸ் ஆய்வில் ரோட்டில் நடந்து செல்வோர் 40 சதவீதம் பேரும், டூவீலரில் செல்வோர் 56.5 சதவீதமும் பேரும் விபத்திற்குள்ளாகி உள்ளனர்.
மோர், ஜூஸ்
கோடையை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு கமிஷனர் லோகநாதன் மோர், ஜூஸ், தொப்பி, கூலிங்கிளாஸ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணைகமிஷனர் வனிதா, கூடுதல் துணைகமிஷனர் திருமலைக்குமார், உதவிகமிஷனர்கள் செல்வின், இளமாறன், இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, கார்த்திக், நந்தகுமார், சுரேஷ், சோபனா, பூர்ணசந்திரன், தங்கபாண்டி பங்கேற்றனர். தினமும் காலை, மதியம் 4 மாதங்களுக்கு போலீசாருக்கு மோர், ஜூஸ் வழங்கப்படும்.