சுற்றித்திரியும் தெருநாய்கள்...கடித்து குதறும் கொசுக்கள்... பரிதவிப்பில் திண்டுக்கல் 20 வது வார்டு மக்கள்

திண்டுக்கல்; சுற்றித்திரியும் தெருநாய்கள், கடித்து குதறும் கொசுக்கள், இல்லாத சாக்கடைகள் என பல்வேறு பிரச்னைகளில் திண்டுக்கல் 20 வது வார்டு மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

திண்டுக்கல் வி.எம்.ஆர். பட்டி 1, 2வது தெரு, ஏ.எம்.சி.,ரோடு, மெங்கில்ஸ் ரோடு, ஏ.ஆர். நகர், நாராயணதாஸ்நகர், போலீஸ் குவாட்டர்ஸ், மேற்கு ஆரோக்கியமாதா கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்தவார்டில் எண்ணிலடங்கா பிரச்னைகளுடன் மக்கள் கண்விழி பிதுங்கி நிற்கின்றனர். தெரு நாய்கள் கூட்டமாக வரும்போது குழந்தைகளை கடிக்கின்றன. இதைப்பிடிக்க மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டால் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எப்போதாவது அதிகாரிகள் வருகின்றனர். வந்தபோதிலும் இங்கிருக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்த அவர்களால் முடியவில்லை. கண்துடைப்பிற்கு ஒருசில நாய்களை பிடிக்கின்றனர். அதையும் மீண்டும் இங்குள்ள தெருக்களில் கொண்டு விடுகின்றனர்.

பல பகுதிகளில் ரோடுகள் குறுகலாக இருப்பதால் டூவீலர், கார்களில் செல்வோருக்கு இடையூறாக உள்ளது. சில நேரங்களில் தடுமாறி கீழே விழுகின்றனர். இதனால் ஆம்புலன்ஸ்கள் கூட தெருக்களில் வர மறுக்கின்றன .

இங்குள்ள தெருக்களில் பலரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அவரசத்திற்கு கூட வாகனங்கள் உள்ளே வரமுடியாமல் வெளியில் நிற்கும் நிலை உள்ளது. இரவில் மட்டுமில்லாமல் பகல் நேரத்திலும் ஏராளாமாக கொசுக்கள் இங்குள்ள கழிவுநீரில் உற்பத்தியாகி மக்களை கடிக்கிறது. டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் இருப்பதால் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தன் கவனத்தை இந்த வார்டில் திருப்பவேண்டும். மழை நேரங்களில் சாக்கடை வசதிகள் இல்லாமல் இருப்பதால் கழிவுநீர் ரோட்டில் செல்வதோடு வீடுகளுக்குள்ளும் வருகின்றன. வடிகால்களும் இல்லாமல் இருப்பதால் பெரும் பிரச்னையாக உள்ளது. அதிகாரிகளை கேட்டால் சாக்கடை வசதிகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர். இதனால் மக்கள் என்ன செய்வது என தெரியாமல் அல்லாடுகின்றனர்.

தெரு விளக்கு வேண்டும்



சுந்தர்ராஜன், வி.எம்.ஆர்.பட்டி, 2வது தெரு: 20 வது வார்டில் பல இடங்களில் தெரு விளக்குகள் இல்லாமல் உள்ளது. இதனால் இரவில் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளுக்குள் முடங்குகின்றனர். அதுமட்டுமில்லாமல் இருள் சூழ்ந்து கிடப்பதால் திருட்டு பயமும் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் எங்கள் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவை சாக்கடை வசதி



செல்வராஜ், வி.எம்.ஆர்.பட்டி, 2வது தெரு: வி.எம்.ஆர்.பட்டி பகுதிகளில் எங்கும் சாக்கடை வசதிகள் இல்லாமலிருப்பதால் கழிவுநீர் ரோட்டில் செல்கின்றன. மழை நேரங்களில் சொல்லவே வேண்டாம். மழை நீரோடு சேர்ந்து கழிவுநீரும் வீடுகளுக்குள் வருகிறது. இதைக்கட்டுப்படுத்த சாக்கடை வசதிகள் அமைக்க வேண்டும்.

குறுகிய தெருக்கள்



ஜெயலட்சுமி, வி.எம்.ஆர்.பட்டி, 2வது தெரு: வி.எம்.ஆர்.பட்டி 2வது தெரு பகுதியில் தெருக்கள் குறுகலாக இருப்பதால் அவசரத்திற்கு கூட எந்த வாகனங்களும் உள்ளே வர முடியாத நிலை உள்ளது. கொசுக்கள் அதிகளவில் இருப்பதால் குழந்தைகள் வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கினர். கொசு மருந்து அடிக்க வேண்டும்.

விரைவில் நடவடிக்கை



ஜெயந்தி, கவுன்சிலர், (தி.மு.க.,): தெரு விளக்குகளில் தற்போது 35 விளக்குகள் எரியாமல் உள்ளது. அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். விளக்குகள் வந்ததும் பொருத்தப்படும். சாக்கடையும் அமைக்கப்பட்டுள்ளது. தெரு நாய்கள் தொல்லையும் உள்ளது. இதை அடிக்கடி அதிகாரிகள் பிடித்து செல்கிறார்கள். விரைவில் மக்கள் பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement