சேதமடையும் மின்கம்பங்கள் பல ஆயிரம் ரூபாய் வீண்

திருவாலங்காடு:திருவள்ளூர் அருகே, சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாராயணபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் தரையில் போடப்பட்டு உள்ளன.

பட்டரைபெரும்புதுார், மஞ்சாகுப்பம், புதுார், எல்லப்பநாயுடுபேட்டை, ராமஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், மின்கம்பங்கள் சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.

அதற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மின்கம்பங்கள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றாமல் விடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி வாசிகள் சேதமடைந்த மின்கம்பங்கள் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், மாற்றாக வரவழைக்கப்பட்ட மின்கம்பங்கள் கேட்பாரற்று சாலையோரம் போடப்பட்டுள்ளது. இந்த புதிய மின்கம்பங்கள் மழையில் நனைந்து மண் மூடி, செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, மின்கம்பங்கள் பலவீனமடையும் அபாயம் உள்ளது.

மேலும், மின்வாரியம் வாயிலாக பல ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட மின்கம்பங்கள் வீணாகி வருவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த மின்கம்பங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement