புதிதாக யாருக்கும் உரிமம் தரக்கூடாது: அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வலியுறுத்தல்

1

'அரசு கேபிள் டிவி நிறுவனம், புதிய ஆபரேட்டர்களுக்கு உரிமம் வழங்குவதை கைவிடவேண்டும்' என, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், குறைந்த மாத கட்டணத்தில் அதிக சேனல்களை வழங்கி வருகிறது. ஆனாலும், எச்.டி., செட்டாப் பாக்ஸ் இல்லாதது மற்றும் ஒளிபரப்பில் அடிக்கடி ஏற்படும் தடங்கல் போன்றவற்றால், அரசு கேபிள் நிறுவனம் வாடிக்கையாளர்களை இழந்து விட்டது. அரசு கேபிள் ஆபரேட்டர்கள் பலர், தனியார் கேபிள் நிறுவன ஆபரேட்டர்களாக மாறி விட்டனர்.

நெருக்கடி



நீண்ட கால எதிர்பார்ப்புக்கு பின், தற்போது அரசு கேபிள் ஒளிபரப்பில் எச்.டி., செட்டாப் பாக்ஸ்கள் அறிமுகமாகியுள்ளன. இதனால், இழந்த வாடிக்கையாளர்களை வசப்படுத்தும் முயற்சியில் அரசு கேபிள் டிவி நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.


ஏற்கனவே அரசு கேபிள் உரிமம் பெற்று, பாக்ஸ்களை இயக்காத ஆபரேட்டர்களுக்கு பதில், புதிய ஆபரேட்டர்களை நியமிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்க, திருப்பூர் மாவட்ட தலைவர் வீரமுத்து கூறியதாவது:


தமிழகம் முழுதும், 25,000 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்ளனர். அரசுகேபிள் இணைப்பில், 'எச்.டி., செட்டாப்பாக்ஸ்' இல்லாததால், ஆபரேட்டர்கள், ஒரு பகுதி வாடிக்கையாளர்களுக்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கி ஒளிபரப்பை கொடுத்து வருகின்றனர். தற்போது, அரசு கேபிள் டிவி நிறுவனம், 2 லட்சம்பாக்ஸ்களை கொள்முதல்செய்துள்ளது. இதனால், அரசு வழங்கும் எச்.டி.,பாக்ஸ்களை வாங்கி பொருத்தி வருகின்றனர்.


திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், எங்கள் சங்கத்தை சேர்ந்த ஆபரேட்டர்கள், 5,000க்கும் மேற்பட்ட அரசு எச்.டி., பாக்ஸ்களை வாங்கி பொருத்தி வருகின்றனர். ஆனாலும், புதிய ஆபரேட்டர்களுக்கு அரசு கேபிள் ஒளிபரப்பு உரிமம் வழங்கி, பழைய ஆபரேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். பல ஆண்டுகளாக இந்த தொழிலையே சார்ந்துள்ள ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது.

பெரும் நிதிச்சுமை



அரசு கேபிளுக்கு ஆதரவு அளித்து வரும் ஆபரேட்டர்களுக்கு, அரசு துணை நிற்க வேண்டும். ஏற்கனவே தனியாரிடம் தொகை கொடுத்து வாங்கிய செட்டாப்பாக்ஸ்களைஅகற்றி விட்டு, மீண்டும்அரசுக்கு தொகை கொடுத்து பாக்ஸ் வாங்க வேண்டியுள்ளதால், ஆபரேட்டர்கள் பெரும் நிதிச்சுமையை சந்திக்க நேரிடுகிறது. எனவே, அரசு செட்டாப் பாக்ஸ்களை பொருத்த வேண்டும் என, நிர்பந்திப்பதை கைவிட வேண்டும். எங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்வரின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -

Advertisement