பைக் மீது லாரி மோதி சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

மேடவாக்கம்,
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ஆனந்தா நகர், சென்னி அம்மன் சாலையை சேர்ந்தவர் கார்த்திகேயன், 38; சாப்ட்வேர் இன்ஜினியர். இவர், மேடவாக்கம், செல்லி அம்மன் கோவில் தெருவில், குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, தனது சுசுகி பர்க்னன் இருசக்கர வாகனத்தில், பால் வாங்கிக்கொண்டு, வேளச்சேரி பிரதான சாலை வழியாக வீடு வந்து கொண்டிருந்தார்.

பள்ளிகரணையில் உள்ள பர்னிச்சர் கடை அருகே சென்றபோது, இடது பக்கம் வந்த ஈச்சர் லாரி, எதிர்பாராதவிதமாக கார்த்திகேயன் மீது மோதியது.

இதில், கீழே விழுந்த அவர் மீது, அதே லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரான, சிவகங்கை மாவட்டம், கள்ளர்பட்டியை சேர்ந்த பூபதி, 53, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement