சென்னையில் முதல் 'ஏசி' மின்சார ரயில் உத்தேச கால அட்டவணை வெளியீடு

சென்னை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இயக்க உள்ள மின்சார ரயிலின் உத்தேச கால அட்டவணை பட்டியல் நேரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை ஐ.சி.எப்., ஆலையில், தெற்கு ரயில்வேக்கான முதல் 'ஏசி' மின்சார ரயில் பிப்., முதல் வாரத்தில் தயாரானது. 12 பெட்டிகள் கொண்ட இந்த 'ஏசி' மின்சார ரயில் சென்னை ரயில் கோட்டத்தில் பிப்ரவரி 3வது வாரத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த 'ஏசி' ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும். அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

இந்த 'ஏசி' மின்சார ரயில் சேவையை பிரதமர் மோடி விரைவில் துவங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் நேரம், நிறுத்தம் தொடர்பாக, தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவின் பரிந்துரைபடி கால அட்டவணை நேரம் வெளியாகியுள்ளது.

இந்த ரயில் தாம்பரம் பணிமனையில் இருந்து அதிகாலை 5:45 மணிக்கு புறப்பட்டு, காலை 6:45 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 7:00, பிற்பகல் 3:45, இரவு 7:35 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் ரயில், தாம்பரத்துக்கு காலை 7:48, மாலை 4:20, இரவு 8.30 மணிக்கு சென்று அடையும். அங்கிருந்து புறப்பட்டு செங்கல்பட்டுக்கு காலை 8:35, மாலை 5:25 மணிக்கு செல்லும்.

செங்கல்பட்டில் இருந்து காலை 9:00, மாலை 5:45 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்துக்கு 9:38, மாலை 6:23 மணிக்கு செல்லும். அங்கிருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10:30, இரவு 7:15 மணிக்கு செல்லும். இரவு 7:35 ரயில் சேவை தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

இந்த ரயில் அதிகாலையில் தாம்பரம் பணிமனையில் இருந்து புறப்பட்டு கடற்கரை வந்தடையும் போதும், இரவில் கடற்கரையில் இருந்து தாம்பரம் பணிமனைக்கும் செல்லும் போதும் புறநகர் பாதையில் இயக்கப்படும்.

பிரதான பாதையில் செல்லும்போது, இந்த ரயில் கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனுார் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில் சேவை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, உத்தேச கால அட்டவணையாக உள்ளது. விரைவில் இறுதி செய்யப்பட்டு, சேவை துவங்கும் தேதியோடு அறிவிக்கப்படும், என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

**********

Advertisement