குப்பை கிடங்கிற்கு இடம் தனியார் தந்தால் விலைக்கு வாங்க தயார்: அமைச்சர் நேரு

சென்னை:''நகரங்களில் குப்பை கிடங்கிற்கு இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது. குறைந்த விலைக்கு தனியார் இடம் அளிக்க முன்வந்தால், வாங்க தயாராக உள்ளோம்,'' என, அமைச்சர் நேரு தெரிவித்தார்.

சட்டசபையில், தி.மு.க., - ராமகிருஷ்ணன், குப்பைகளிலிருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு, ''குப்பையை மக்க வைக்கும் இடம், நம் மாநிலத்தில் போதுமானதாக இல்லை. இடமிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு நகரங்களில், குப்பை தீராத பிரச்னையாக உள்ளது. 'பயோமைனிங்' முறையில், பெரிய குப்பை மேடுகளை பிரித்து அகற்றி உள்ளோம்.

''பல நகரங்களில் கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்க, மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, ஓரமான இடம் பார்த்து அமைக்க வேண்டி உள்ளது.

''தனியாரிடம் இடம் இருந்தால், விலைக்கு வாங்கவும் தயாராக உள்ளோம். எல்லா இடத்திலும் இடம் பிரச்னை உள்ளது.

தற்போதுதான் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, சென்னையில் துவக்க உள்ளோம். அடுத்து கோவை, மதுரை போன்ற பகுதிகளில் துவக்கப்படும்,'' என்றார்.


பட்டா போட்டு கொடுத்தாச்சு!




நகர்ப்புறங்களில் அரசு கட்டடங்கள் கட்ட, குப்பை கிடங்கு அமைக்க, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, இடம் இல்லாத நிலை உள்ளது. அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளோரை அகற்றாமல், அவர்களுக்கு அரசே பட்டா போட்டு கொடுக்கிறது. அப்புறம் எப்படி அரசு தேவைக்கு இடம் கிடைக்கும்?அரசு நிலங்களை தாரை வார்த்துக் கொண்டே இருந்தால், அடிப்படை தேவைகளுக்கு, அரசு இடமின்றி தவிக்கும் நிலை ஏற்படும். இனிமேலாவது அரசு விழித்துக் கொள்ள வேண்டும் என்பதே, பொது மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement