அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் வழக்கு

1

சென்னை:கூட்டாட்சி மற்றும் அதிகாரங்களின் அடிப்படை கட்டமைப்பை மீறியதாகக் கூறி, அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சோதனை



தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட, 20 இடங்களில், சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இச்சோதனையில், 1,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாக, அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

அதில் கூறியிருப்பதாவது:

அமலாக்கத்துறை, எந்தவொரு மாநிலத்திலும், விசாரணை நடத்துவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

ஆனால், அமலாக்கத்துறை எந்தவொரு ஒப்புதலையும் பெறவில்லை. சோதனை நடவடிக்கை என்ற போர்வையில், டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை துன்புறுத்தி உள்ளனர்.

மாநில அரசின் அனுமதியின்றி, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, கூட்டாட்சியின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் அதிகாரங்களை மீறுவதாகும்.

டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கான அடிப்படை உரிமைகளை வெளிப்படையாக புறக்கணித்து, அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது.

சட்ட விரோதம்



தன்னிச்சையான போக்குடன் செயல்படும் அமலாக்கத்துறை, டாஸ்மாக் பெண் ஊழியர்கள் உட்பட பலரை, 60 மணி நேரத்திற்கும் மேலாக, சட்ட விரோதமாக காவலில் வைத்துள்ளது.

பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக, அமலாக்கத் துறையின் ஈ.சி.ஐ.ஆர்., எனும் வழக்கு தகவல் பதிவேட்டின் அசல் நகலை வழங்க, அமலாக்கத் துறைக்கு இடைக்காலமாக உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள், இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Advertisement