ராமேஸ்வரம் மீனவர்கள் இருவருக்கு 6 மாதம் சிறை; ரூ.80 லட்சம் அபராதம் 4 பேர் விடுதலை

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இரு படகு டிரைவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.80 லட்சம் அபராதமும் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிப்.,19ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் இரு விசைப்படகை பறிமுதல் செய்து, அதில் இருந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். நேற்று மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

படகின் டிரைவர்கள் ஜான் முத்துக்குமார் 44, தொன்போஸ்கோ 60, ஆகியோருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.40 லட்சம் அபராதமும் (இந்திய மதிப்பில் 11.60 லட்சம்) விதித்தும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மற்ற நான்கு மீனவர்களான பவுல் 55, லவ்சன் 52, அந்தோணி ராஜ் 45, செல்வராஜ் 52, ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இவர்களை கொழும்பு அருகே மெரிகானா முகாமில் போலீசார் தங்க வைத்தனர். அவர்கள் விரைவில் தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர். படகு டிரைவர்கள் இருவரையும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகள் மற்றும் ஏற்கனவே சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

இதனால் 700 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர். அடிக்கடி ஸ்டிரைக் நடப்பதால் மீனவ இளைஞர்கள் பலர் துாத்துக்குடி, கன்னியாகுமரி, கேரள கடல்பகுதிகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர்.

Advertisement