பணி நிரந்தரம் கோரி மின் ஊழியர்கள் போராட்டம்

சென்னை:மின் வாரியத்தில், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, தமிழக மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், தமிழக தேசிய காங்கிரஸ் மின்சார தொழிலாளர் சம்மேளனம் ஆகியவை சார்பில், சென்னை அண்ணாசாலை மின் வாரிய தலைமை அலுவலகம் பின்புறம், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:

கடந்த, 1998 முதல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களில், நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்ற, 6,788 நபர்களையும், மின் உற்பத்தி, பகிர்மானம் உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரியும், ஒப்பந்த ஊழியர்களையும் விரைவாக பணி நிரந்தரம் செய்ய, மின் வாரியமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'தமிழக மின் வாரியத்தில், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நேரடியாக ஒப்பந்த ஊழியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. போராட்டம் விபரத்தை, அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வோம்' என்றனர்.

Advertisement