மனைவியை தாக்கியவர் கள்ளக்காதலியுடன் கைது

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே, கள்ளக் காதலியுடன் சேர்ந்து, மது போதையில் மனைவியை அடித்து துன்புறுத்திய கணவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாம்பரம் அடுத்த சோமங்கலம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பவானி, 45. தி.மு.க., பிரமுகரான இவர், சோமங்கலம் ஊராட்சி துணைத் தலைவராகவும் உள்ளார்.

பவானியின் கணவர் ஞானசேகரனுக்கும், குன்றத்துார் அடுத்த புதுநல்லுார் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் மனைவி ரேணுகா, 30, என்பவருக்கும், கடந்த சில ஆண்டுகளாக, தகாத உறவு இருந்துள்ளது.

இந்நிலையில், ரேணுகா மற்றும் ஞானசேகரன் இருவரும் சேர்ந்து, பவானியைப் பற்றி தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதுதவிர, ரேணுகாவின் துாண்டுதலில், மது போதையில் ஞானசேகரன், அடிக்கடி பவானியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.

மேலும், பவானியின் குடும்பத்தாரை மிரட்டிய ரேணுகா, ஞானசேகரனை தன் பிடியிலிருந்து விடுவிக்க, 20 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, பயமுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த 18ம் தேதி, பவானி புகார் அளித்தார். அதன்படி, போலீசார் விசாரித்ததில், நடந்த சம்பவங்கள் உண்மை என தெரிந்தது.

இதையடுத்து, ஞானசேகரன் மற்றும் ரேணுகா இருவரையும் கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Advertisement