வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு: அண்ணாமலை கண்டனம்

51


சென்னை: '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று மக்கள் தொகையை அதிகரித்து விட்டனர்,'' என தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியுள்ளார். இதற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தென் மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்பை ஒத்தி வைக்க வேண்டும் என தி.மு.க., வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக நாளை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கூட்டம் ஒன்றில் தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:
1966 ல் முதல்முறை குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை முதன் முதலில் எடுத்து வந்தனர். இந்தியாவில் அறிமுகம் செய்தனர். அனைத்து மாநிலங்களும் இதனை கடைபிடிக்க வேண்டும். உலகத்தில் சீனாவிற்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இது இப்படியே போனால் நாடு உருப்படாது. மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என சொல்லி குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை எடுத்து வந்தாங்க

அனைத்து ஊர்களிலும் முக்கோணம் போட்டான். சிவப்பு கலரில். இப்போது உள்ள இளைஞர்களுக்கு எல்லாம் இது தெரியாது. முதலில், நாம் இருவர் நமக்கு இருவர் என்றான். அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து, மக்கள் தொகை அதிகரித்து கொண்டே போனதால், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றான். அடுத்த ஐந்து வருடங்களில் நாமே குழந்தை. நமக்கு ஏன் குழந்தை என சொன்னான்.


இதனை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மத்திய அரசு சொன்னதை ஏற்றுக் கொள்வதாக சொல்லி கட்டுக்கோப்பாக இருந்து ஒன்று, இரண்டு குழந்தைகளுக்கு மேல் நம்மாட்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஜனத்தொகை குறைந்தது. ஆனால் வட நாட்டில் இருக்கிறவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று போட்டு மக்கள் தொகையை எக்கச்சக்கமாக்கினர். தற்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு என சொல்லி நமது தொகுதிகள் அடிபட்டு போகிறது. இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

இந்த வீடியோவை 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அத்துடன் பதிவிட்டுள்ளதாவது: தொகுதி மறுவரையறை குறித்து நாளை நாடகத்தை நடத்தும் முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., அமைச்சர் அன்பரசனின் இந்த உரையை தனது 'இண்டி' கூட்டணி தலைவர்களுக்கு ஒளிபரப்புவார் என நம்புகிறோம்.வட இந்திய சகோதரர், சகோதரிகளை அவமதிக்கவும், துஷ்பிரயோகம் செய்யவும் தி.மு.க., அமைச்சர்கள் கூட்டாக முடிவு எடுத்தது போல் தெரிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement