கடந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சிக்கே நிதி வரலை *இந்தாண்டு பயிற்சி கேள்விக்குறி

விருதுநகர்: தமிழகத்தில் கடந்த ஆண்டு நடத்திய நீட் தேர்வு சிறப்பு பயிற்சிக்கு செலவு செய்யப்பட்ட நிதியை பள்ளிக்கல்வித்துறை தற்போது வரை வழங்கவில்லை. இதனால் இந்தாண்டு பயிற்சியின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 2024ல் நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வு முடிந்த மார்ச் 25 முதல் நீட் தேர்வு நடக்கும் மே 2 வரை முழு நேர நீட் பயிற்சிகள், தேர்வுகள் நடத்தப்பட்டது. ஏற்கனவே நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஜே.இ.இ., நீட் தேர்வு சார்ந்த பயிற்சிகள், அரசு, உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

2024 மார்ச் 25ல் தேர்வு முடிந்த நாள் முதல் நீட் தேர்வு பயிற்சிகள் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வகுப்புகளில் இணையதள வசதி, ஸ்மார்ட் வகுப்பறை இருந்தன.

இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே ஆர்வமும் விருப்பமுள்ள உடைய ஆசிரியர் குழு அமைக்கப்பட்டு கற்பிக்கப்பட்டது. காலை சிற்றுண்டி, தேநீர், மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பயற்சி வகுப்புகளுக்கு சென்று வருவதற்கான பஸ் கட்டணமும் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் ஆணை வெளியிடப்பட்டது.

கடந்த ஆண்டு சிறப்பு பயிற்சிகளை மாவட்ட நிர்வாகங்கள், அந்தந்த பள்ளிக்கல்வித்துறையினர் தங்கள் சொந்த செலவில் நடத்தி முடித்தனர்.

ஆனால் அந்த செலவின தொகையை தற்போது வரை பள்ளிக்கல்வித்துறை தரவில்லை. இந்தாண்டு மார்ச் 24ல் பிளஸ் 2 தேர்வு முடிய உள்ளது.

நீட் சிறப்பு பயிற்சியை மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்த்துள்ள சூழலில் இந்த ஆண்டு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மீறி நடத்த அறிவுறுத்தப்பட்டாலும் நிதி ஒதுக்கீடு இல்லாததால் பெயரளவுக்கு நடக்கும் அபாயம் உள்ளது.

Advertisement