சட்டசபையில் கூட்டல் கழித்தல் கணக்கு; வானதி சிரிப்புக்கு விளக்கம் சொன்ன அமைச்சர்!

7

சென்னை: 'நீங்கள் இங்கே கூட்டல் கழித்தல் கணக்கு போடுகிறீர்கள். உங்களது கூட்டல் கழித்தல் கணக்குகளை வேறு எங்கோ இருக்கும் ஒருவர் போட்டுக்கொண்டிருக்கிறார்,'' என்று அ.தி.மு.க.,வினரை பார்த்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.




லேப்டாப் விவகாரம்


'மாணவர்களுக்கு அரசு வழங்கும் லேப்டாப்புக்கு 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் லேப்டாப் வாங்க முடியுமா' என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி, சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதேபோன்று வேறு சில நிதிக்கணக்கு விவகாரங்கள் பற்றியும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, 'நீங்கள் இங்கே கூட்டல் கழித்தல் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களது கூட்டல் கழித்தல் கணக்குகளை வேறு எங்கோ இருக்கும் ஒருவர் போட்டுக் கொண்டிருக்கிறார். உங்கள் மடியில் இருக்கும் கனத்தை வேறு ஒருவர் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார். நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அ.தி.மு.க., தொண்டர்களின் எதிர்காலத்தை நீர்த்துப்போக கூடிய அளவில் சாணக்கிய தந்திரத்தோடு செயல்படுகிறார்,'' என்றார்.

வானதி சிரிப்பு

இதைக்கேட்டதும் பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சிரித்தார். அவர் சிரிப்பதை பார்த்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ''என் கருத்திற்கு வானதி சீனிவாசன் மிகுந்த மகிழ்ச்சியோடு சிரிக்கிறார். அப்படியானால் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது,'' என்றார்.



இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, ''எங்களுக்கு என்று கொள்கை இருக்கிறது. எந்த கூட்டல் கழித்தல் கணக்கிற்கும் நாங்கள் ஏமாற மாட்டோம்,'' என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ''கூட்டல் கழித்தல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் மகிழ்ச்சி தான்,'' என்றார்.

அ.தி.மு.க., அமளி



நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை பேசிவிட்டு அமரும் போது தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அ.தி.மு.க., வலியுறுத்தியது. 'உங்களுக்கான வாய்ப்பு பின்னர் வழங்குகிறேன்' என சபாநாயகர் தெரிவித்தார். இப்போதே வழங்க வேண்டும் என அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.

Advertisement