தி.மு.க.,வுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம்: அண்ணாமலை

சென்னை: ''தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் என்பது நிரூபணம் ஆகி உள்ளதால், மக்கள் அவர்களுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்களின் திறமையின்மையால் மக்கள் அவதிப்படக்கூடாது'', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்தியா டுடே ஆங்கில ஊடகத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:
சமீபத்தில் தி.மு.க., அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மீண்டும் ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்துள்ளது. இதில், தொலைநோக்கு பார்வை இல்லாததுடன், பட்ஜெட் ஆவணங்களை வாசிப்பது போல் அல்லாமல், தேர்தல் அறிக்கை போல் வாசிக்கப்பட்டது.
தமிழகத்தின் கடன் சுமை குறைக்கப்படும் என தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இதற்காக, சில பொருளாதார நிபுணர்களை ஒருங்கிணைத்த போதிலும், கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமை இரண்டு மடங்காக ஆகி உள்ளது.
கடந்த 2021 ஜூன் மாதம் தமிழகத்தின் முன்னாள் நிதியமைச்சர், வட்டி சுமையை குறைப்பதற்காக கடனை மறுசீரமைப்பது குறித்து பேசியிருந்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவர்களின் வாக்குறுதி வெறும் வார்த்தைகளாக மட்டுமே உள்ளது.
தற்போது தி.மு.க., அரசு தனது நிர்வாக சீர்குலைவை மறைப்பதற்காக, மாநிலத்தை மற்றொரு மாநிலத்தோடு தான் ஒப்பிட வேண்டும் என்பதை அறியாமல், மாநிலத்தில் மொத்த கடனை, நாட்டின் கடனுடன் ஒப்பிட்டு பேசி வருகிறது.
தமிழக அரசின் வருமானத்தின் பெரும்பகுதி டாஸ்மாக்கில் மது விற்பனை மூலம் மட்டுமே வருகிறது. அங்கிருந்து அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. அதற்கு மாறாக, மது விற்பனை மூலம் வருமானம் ஈட்டாத குஜராத் அரசு, ரூ.19,696 கோடி உபரி வருமானத்துடன் பட்ஜெட் தாக்கல் செய்தது. ஆனால், தமிழக அரசு ரூ.46,467 கோடி நிதிப்பற்றாக்குறையுடன் பட்ஜெட் தாக்கல் செய்தது.
மூலதன உள்கட்டமைப்புக்காக குஜராத் அரசு ரூ.95,472 கோடி செலவு செய்கிறது. தமிழக அரசு, இதற்கு குறைவாக ரூ.57,231 கோடி மட்டுமே செலவு செய்கிறது.
அதேநேரத்தில் குஜராத் மாநிலத்தின் கடன் ரூ.3.7 லட்சம் கோடியாக இருக்கும்போது, தமிழகத்தின் கடன் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.9.62 லட்சம் கோடியாக உள்ளது.
மூலதன உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக குஜராத் கடன் தொகையை பயன்படுத்தும் நிலையில், தமிழகமானது, வருவாய் பற்றாக்குறையை சமாளிக்கவும், கடன் மற்றும் வட்டி கட்ட செலவு செய்து வருகிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆன பிறகும், பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் வருவாய் பற்றாக்குறை உள்ளது. தேர்தலின் போது அளித்த பல வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை.
தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்தது முதல், விளம்பரத்திற்காக மட்டும் செலவு செய்கிறது. தங்களது தோல்வியை மறைக்க, விளம்பரத்திற்காக அதிக பணம் செலவு செய்கிறது. 2023-24 ல் விளம்பரத்திற்காக தமிழக அரசு ரூ.35 கோடி செலவு செய்துள்ளது. இது 2024-25ல் ரூ.110 கோடி ஆக அதிகரித்தது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்காக விளம்பரத்திற்கான செலவு 2023-24ல் ரூ.1,65 கோடியில் இருந்து 2025- 26ல் ரூ.11.48 கோடியாக அதிகரித்து உள்ளது. ஆனால், பட்ஜெட்டில், ஆதிதிராவிடர் விடுதிகளை மேம்படுத்துவதற்கான செலவு ரூ.55 கோடியில் இருந்து 20 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.
விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்கான சிறப்பு திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.134 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.30.5 கோடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல், இந்தாண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் எண்ணற்ற திட்டங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி வளர்ச்சி திட்டம், மின்சாரத்தில் இயங்கும் பஸ்கள் திட்டத்திற்கு ஒதுக்கப்படவில்லை. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் கீழ் 3,500 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் ரூ.1000 கோடி மட்டும் ஒதுக்கப்படுகிறது. முதல்வர் கிராம சாலை திட்டத்திற்கு கீழ் ரூ.2,200 கோடி தேவைப்படும் நிலையில் ரூ.1,644 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ரூ.8,876 கோடி மட்டும் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.4,400 கோடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க., ஆட்சியில் விவசாய பரப்பளவு 4 லட்சம் ஏக்கர் குறைந்துள்ளது. விவசாயிகளுக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டிலும் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த ஆண்டு விவசாய பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினோம். ஆனால், அதனை மறுத்த தி.மு.க., அரசு, விவசாயக்கடன் முழுமையாக ரத்து செய்ததாக கூறியது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரத்துக்காக ரூ.1,774 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக மக்களை தி.மு.க., அரசு எப்படியெல்லாம் தவறாக வழிநடத்துகிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.
தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் என்பது நிரூபணம் ஆகி உள்ளதால், மக்கள் அவர்களுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்களின் திறமையின்மையால் மக்கள் அவதிபடக்கூடாது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.










