பெண்ணை காதலித்து ஏமாற்றியவருக்கு 'காப்பு'

திருவொற்றியூர், பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

தனியார் உணவு விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த கொளத்துாரைச் சேர்ந்த ரதீஷ், 25, என்பவரும் நானும் எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.

அவர், திருமணம் செய்து கொள்வதாக, பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பணமும் பெற்றுக் கொண்டார். தற்போது, திருமணம் செய்து கொள்ள முடியாது என, குடும்பத்தினருடன் சேர்ந்து மிரட்டி வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரித்த திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், வழக்கில் தொடர்புடைய ரதீஷ் என்பவரை, நேற்று கைது செய்து, விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.

Advertisement