உச்சம் தொட்ட தேங்காய், கொப்பரை சீசன் துவங்கினாலும் மகசூல் 40% சரிவு


உச்சம் தொட்ட தேங்காய், கொப்பரை சீசன் துவங்கினாலும் மகசூல் 40% சரிவு


தேங்காய் உற்பத்தி சீசன் துவங்கியுள்ள நிலையில், கொப்பரை, தேங்காய் விலை எதிர்பார்ப்பை விட உயர்ந்து உச்சத்தை அடைந்துள்ளது. நோய், வெள்ளை ஈ தாக்குதல் போன்ற காரணங்களால், தேங்காய் உற்பத்தி பாதியாக குறைந்த சூழலில், முழு பலனை விவசாயிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மற்ற சாகுபடிகளை விட தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். மேலும், வறட்சி, வாடல்நோய் மற்றும் வெள்ளை ஈ தாக்குதல் போன்ற காரணங்களால் தென்னை விவசாயிகள் மீளாத்துயரில் உள்ளனர்.
தற்போது, கொப்பரை, தேங்காய் விலை உயர்ந்தாலும், விவசாயிகள் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்காய் உற்பத்தி சீசன் துவங்கினாலும், பல்வேறு காரணங்களினால் உற்பத்தி குறைந்துள்ளது. _இதனால், தேங்காய், கொப்பரை விலை வேகமாக உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது.
கொப்பரை உலர்களங்கள், ஐந்தாயிரத்துக்கும் மேல் இருந்தும், கடந்த, ஏழு மாதங்களாக அவை மூடப்பட்டுள்ளன; கொப்பரை உற்பத்தியே இல்லை.இதனால், வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று வேறு வேலைக்கு செல்கின்றனர். தற்போது சீசன் துவங்கினாலும், மீண்டும் தொழிலாளர்களை பிடித்து உற்பத்தியை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விலை உயர்ந்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள், இடைத்தரகர்கள் 'சிண்டிகேட்' அமைத்து விலையை குறைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பலரும் கொப்பரை உற்பத்தியை துவங்க முன்வருவதில்லை. தற்போது, ஒரு கிலோ கொப்பரை (சாதா) - 170, ஸ்பெஷல் - 175, கறுப்பு தேங்காய், ஒரு டன் - 66 ஆயிரம், பச்சை தேங்காய் - 58 ஆயிரம் ரூபாயாக உள்ளது. ஒரு டின் (15 கிலோ) தேங்காய் எண்ணெய், 3,700 ரூபாய், ஒரு கிலோ பவுடர், 255 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது தவிர, ெகாப்பரை, 180 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கொப்பரை உற்பத்தியாளர் சங்க பிரதிநிதி தங்கவேலு கூறுகையில், ''கடந்தாண்டை காட்டிலும் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது. நோய் தாக்குதல், வறட்சி போன்ற காரணங்களினால், தென்னையில், 60 சதவீதம் மட்டுமே உற்பத்தி இருக்கும். தற்போது விலை உயர்ந்தாலும் முழு பலனை விவசாயிகள் பெற முடியாத சூழலே உள்ளது. நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
நமது நிருபர்

Advertisement