எஸ்.வி.சேகர் சரண் அடைய அவகாசம் அளித்தது கோர்ட்

2

புதுடில்லி : பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்தது தொடர்பான விவகாரத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் சேகர் சரணடைய உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.


பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்ததாக, நடிகர் எஸ்.வி.சேகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரசன்னா, பி.வராலே தலைமையிலான அமர்வில் மேல்முறையீட்டு மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சேகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'என்னுடைய கட்சிக்காரர் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு, அடுத்த மாதம் 2ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரணை நடத்தி, அதற்கான நிவாரணத்தை வழங்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தார்.


அப்போது நீதிபதிகள், 'சம்பந்தப்பட்ட மனுதாரர், பொது வாழ்க்கையில் இருப்பவர். அவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.


எந்த விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். முகநுாலில் கருத்தை பதிவு செய்வதற்கு முன், அதை சரிபார்த்து இருக்க வேண்டாமா?' என, கேள்வி எழுப்பியதுடன், எஸ்.வி.சேகர் சரணடைய நான்கு வாரம் அவகாசம் அளிக்கப்படுவதாக உத்தரவிட்டனர். அதற்குள், தமிழக அரசு இந்த விவகாரத்தில் பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Advertisement