மூழ்கிய கப்பல் கதவை அகற்ற வேண்டும்: சம்பத் எம்.எல்.ஏ.,
புதுச்சேரி: பூஜ்ய நேரத்தில் தி.மு.க., சம்பத் எம்.எல்.ஏ., பேசியதாவது:
கடந்த மாதம் 27ம் தேதி மும்பையை சேர்ந்த பாஜ் என்று அழைக்கப்படும் சிறிய ரக கப்பல் புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து வெளியேறும் போது, அதன் கதவுகள் இரண்டும் உடைந்து முகத்துவாரத்தில் விழுந்தது.
அது முழுமையாக மணலில் முழுகிவிடாமல் வெளியிலேயே நீட்டிக்கொண்டு இருந்தது. இந்த விஷயம் தெரியாமல் மீன்பிடிக்க தொழிலுக்கு சென்று முகத்துவாரம் திரும்பிய 11 விசைப்படகுகள் சேதமடைந்தன.
இந்த விசைப்படகுகளை தலா 8 லட்சம் செலவிட்டு சரி செய்தனர். இந்த தகவல் மற்ற மீனவர்களுக்கு பரவியதை தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர் சங்கம் யாரும் மீன் பிடிக்க போக கூடாது என மறியல் செய்தனர்.
இதனால் கடந்த 27ம் தேதி விசைப்படகு உரிமையாளர் மீன் பிடி தொழிலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக மீன்பிடி சீசன் காலத்தில் தொழில் செய்ய முடியாமல் வருமானம் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து அரசின் சார்பில் எந்த ஒரு அதிகாரியும் ஆய்வு செய்ய வில்லை. அரசின் கவனத்திற்கு வந்ததா என்று கூட தெரியவில்லை.
இதனால் தொழிலுக்கு செல்லாமல் இருந்த படகுகளுக்கும் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். அந்த இரும்பு கதவுகளை முகத்துவாரத்தில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.