வி.எச்.பி., கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி

சென்னை : விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், சென்னை நங்கநல்லுாரில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம், தென்சென்னையில் இன்று நடக்க உள்ளது.

இந்த கூட்டத்துக்குப் பின், சென்னை நங்கநல்லுாரில் உள்ள எம்.ஜி.ஆர்., சாலை ஜே.கே.மஹால் அருகில், ஹிந்து சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தி, இன்று மாலை 5:30 மணி முதல், இரவு 10:00 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த, விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டு உள்ளது.

அதற்கு அனுமதி கோரி, கடந்த 10ம் தேதி காவல் துறை மனு அளித்தும், இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலர் லட்சுமிநாராயணன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில், அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Advertisement