பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த, 30 வயது பெண் மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

அதில், கணவரை பிரிந்து, இரண்டு குழந்தைகளுடன் கொளத்துாரில் வசித்து வருகிறேன். யாரோ தன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, தன் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்டு இருந்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், திரு.வி.க.நகர், சாமுண்டீஸ்வரி நகர், 1வது தெருவைச் சேர்ந்த வினோத்குமார், 34, என்பவர் ஆபாசமாக புகைப்படத்தை சித்தரித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர் புகார்தாரரான பெண்ணின் கணவருடைய நண்பர் என்பது தெரியவந்தது. கணவரை பிரிந்து அப்பெண் வாழ்ந்து வருவதை அறிந்த வினோத்குமார், தன்னிடம் பேச வலியுறுத்தி உள்ளார். பேசாததால் பழிவாங்கும் நோக்கத்தில், புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது.

Advertisement