காதலனுடன் கணவனை கொன்று நாடகமாடிய மனைவி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே காசாங்காடு தெற்கு தெருவை சேர்ந்த விஸ்வலிங்கம் என்பவரது மகன் பிரகாஷ்,40,. கூலி தொழிலாளி. இவர் கடந்த 13ம் தேதி வீட்டின் பின்புறம் உள்ள பூவரசு மரத்தில், துாக்கிட்டு இறந்துள்ளார். அதை போலீசாருக்கு தெரிவிக்காமல், மறுநாள் 14ம் தேதி பிரகாஷ் உடலை அவரது மனைவி நாகலட்சுமி,35, வற்புறுத்தலில், கிராம சடங்குப்படி உறவினர்கள் எரித்து விட்டனர்.

இந்நிலையில், இறந்து போன பிரகாஷ் மனைவி நாகலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த வீரக்குமார்,25, என்பவருக்கும் தகாத உறவுகள் இருந்தது உறவினர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்த பிரகாஷ் மரணத்தில் மர்மம் இருப்பதாக, உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து மதுக்கூர் போலீசார், தகவலின் பேரில், பிரகாஷ் மனைவி நாகலட்சுமியிடம் நடத்திய விசாரணையில், வீரக்குமாருடன், நாகலட்சுமியும் தனிமையில் இருந்த போது, கணவர் பிரகாஷ் பார்த்து விட்டதால், வேறு வழி இன்றி பிரகாஷின் காலை நாகலட்சுமி பிடித்துக் கொண்டார். பிறகு, பிரகாஷின் கழுத்தை வீரக்குமார் நெரித்து கொன்று விட்டு, துாக்கில் தொங்க விட்டு, நாகலட்சுமி நாடகமாடியது தெரியவந்தது.

மேலும், யாருக்கும் சந்தேகம் வருவதற்கு முன்பாகவும், துாக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டதை போலீசாருக்கும் தகவல் அளிக்காமல், உறவினர்களை ஏமாற்றி உடலை எரிக்க வைத்தும் உறுதியானது. எனவே, நாகலட்சுமி மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். மேலும், தென்காசி பகுதியில் கோழிபண்ணை ஒன்றில் வேலை பார்த்து வரும், வீரக்குமாரை கைது செய்ய போலீசார் சென்றுள்ளனர். இறந்து போன பிரகாஷிற்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

Advertisement