கூட்டாட்சி பாதுகாக்கப்பட வேண்டும்: தொகுதி மறுவரையறை கூட்டத்தில் கர்நாடகா துணை முதல்வர் பேச்சு

12


சென்னை: ''இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதற்கான முன்னெடுப்பு தான் இந்த கூட்டம்,'' என்று கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பேசினார்.


சென்னையில் நடந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டத்தில் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பேசியதாவது:
நாடு முழுவதும் இருந்து மூத்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்றாலும் முதல்வர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கூட்டாட்சி



நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை காப்பதற்கான இந்த போராட்டத்துக்கு சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றிணைந்துள்ளோம், வெற்றியை நோக்கி பயணிப்போம். புதிய மக்கள் தொகை அடிப்படையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பை நிராகரிப்பதாக கடந்தாண்டே கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

நிச்சயம் வெற்றி



1971ம் ஆண்டு மக்கள் தொகையே தொகுதி மறுசீரமைப்புக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டம் என்பது வடக்கு, தெற்கு இடையிலான மோதல் அல்ல. இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதற்கான முன்னெடுப்பு தான் இந்த கூட்டம். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திரண்டுள்ள நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஒன்றிணைந்திருப்பது தொடக்கம் தான்.

ஜனநாயகம்



திட்டங்களை வகுப்பது முன்னேற்றம். ஒன்றிணைந்து செயல்படுவதே வெற்றிக்கான வழி. அரசியலமைப்பு சட்டத்தை காக்கவும், ஜனநாயகத்தை காக்கவும் நாட்டின் பல்வேறு தலைவர்கள் திரண்டுள்ளோம். ஜனநாயகத்தை காக்க பல்வேறு மாநில தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். நாட்டின் கூட்டாட்சி தத்துவம் காக்கப்பட வேண்டும்.

கர்நாடகா, தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய தென் மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement