சாம்சன் - ஜூரேல் போராட்டம் வீண்; 44 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி



ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிரான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


18வது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்று பிற்பகலில் நடந்த ஆட்டத்தில் ஐதராபாத், ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா, ஹெட் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 11 பந்தில் 24 ரன்னில் அபிஷேக் ஷர்மா அவுட்டானார். அதன்பிறகு, ஜோடி சேர்ந்த ஹெட், இஷான் கிஷான் ஜோடி அதிரடியை நிறுத்தவில்லை. இதனால், 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் குவித்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஹெட் 21 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பிறகு அவர் 67 ரன்னில் அவுட்டானார். நிதிஷ் ரெட்டி, இஷான் கிஷான் ஜோடி ரன் குவிப்பை நிறுத்தவில்லை. இதனால், 14.1 ஓவரில் அந்த அணி 200 ரன்களை எட்டியது. நிதிஷ் குமார் ரெட்டி 30 ரன்னில் அவுட்டானார்.


சிறப்பாக ஆடிய இஷான் கிஷான் 45 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். க்ளாசன் (34), இஷான் (106 நாட் அவுட்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம், பிரிமீயர் லீக் வரலாற்றில் 2வது அதிகபட்ச ரன்களை ஐதராபாத் குவித்துள்ளது. முதல் இடத்தில் ஐதராபாத் அணியே 287 ரன்னுடன் உள்ளது. அதேபோல, இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரர் 4 ஓவர்களில் 76 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதன்மூலம், பிரீமியர் லீக் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு குஜராத் அணியின் மோகித் ஷர்மா (73) முதலிடத்தில் இருந்தார்.


தொடர்ந்து பேட் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் (1), ரியான் பராக் (4), நிதிஷ் ரானா (11) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால், 50 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து ராஜஸ்தான் தடுமாறியது. அதன்பிறகு, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சனுடன் இளம் வீரர் துருவ் ஜூரேல் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். துருவ் ஜூரேல் (70), சஞ்சு சாம்சன் (66) ஜோடி 100 ரன்களை பார்ட்னர்ஷிப் குவித்தது.


பின்னர், வந்த ஹெட்மயர் (42), சுபம் துபே (34 நாட் அவுட்) அதிரடி காட்டினாலும், 20 ஓவர்களில் அந்த அணியால், 6 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன்மூலம், 44 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

Advertisement