காங்., திரிணமுல் காங்., கட்சியினர் போராட்டம்; பரபரப்பானது பார்லி., வளாகம்

புதுடில்லி: மத்திய அரசுக்கு எதிராக பார்லிமென்ட் வளாகத்தில், காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பார்லிமென்ட் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.


பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 10ம் தேதி துவங்கியது. ஏப்., 4 வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடர் துவங்கி முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இன்று மத்திய அரசு மேற்கு வங்க மாநிலத்திற்கு நிதி தர மறுக்கிறது எனக் கூறி திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் சிறிது நேரம் போராட்டத்தில் கலந்து கொண்டார். போராட்டத்தில் கலந்து கொண்ட திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி கூறியதாவது:


மேற்கு வங்கத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். மேற்கு வங்க மக்களுக்கு எதிரானவர் சிவராஜ் சவுகான். மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க முயற்சித்து வருகின்றனர்.


காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: வேலையின்மை நாட்டின் மிகப்பெரிய
பிரச்னையாக இருக்கிறது. பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை, 30 லட்சத்திற்கும் அதிகமான அரசு வேலைகள் காலியாக உள்ளன. வினாத்தாள் கசிவு நடந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement