முட்டுக்கொடுக்க முடியுமா?

'இவரது தலைமையை ஏற்று தேர்தலை சந்தித்தால் வெற்றி பெறுவது சந்தேகம் தான்...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் பற்றி கூறுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள்.

பீஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. வழக்கம் போல, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கட்சிகள் கூட்டணியாக தேர்தலை சந்திக்கவுள்ளன.

எதிர் அணியில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் களத்தில் உள்ளன. சமீப காலமாகவே நிதிஷ் குமார் பற்றி, எதிர்க் கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

'வயோதிகம் காரணமாக நிதிஷ் குமாருக்கு நினைவு தப்புகிறது. சிறு குழந்தை போல நடந்து கொள்கிறார்...' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் கூறி வந்தனர்.

இந்நிலையில், பாட்னாவில் சமீபத்தில் நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியில், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, நிதிஷ் குமார், தன் அருகில் நின்றிருந்த அதிகாரியின் கையை பிடித்து இழுப்பதும், அவரிடம் பேசுவதுமாக இருந்தார். தேசிய கீதம் முடிவதற்குள், மேடையிலிருந்து இறங்கிச் செல்ல முயன்றார்.

இது தொடர்பான, 'வீடியோ' வெளியாகி பீஹார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'முதல்வர் மீது உள்ள வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதாக இத்தனை நாட்களாக கூறி வந்தோம். இப்போது மேடையிலேயே வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டாரே. இதற்கு எப்படி முட்டுக் கொடுப்பது...' என புலம்புகின்றனர், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர்.

Advertisement