திருநெல்வேலியில் பாம்பு தொண்டியில் மீன் குஞ்சு; குடிநீர் குழாயில் இன்னும் என்னென்ன வருமோ

தொண்டி : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் குழாயில் வந்த குடிநீரில் உயிருடன் மீன் குஞ்சு வந்ததால் மக்கள் அதிர்ச்சியுற்றனர். சில நாட்களாகவே தொடர்ந்து குழாயில் மீன்குஞ்சுகள் வருவதாகவும் புகார் தெரிவித்தனர்.

தொண்டி பேரூராட்சியில் கோவனி பாரூர் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று தொண்டி தரகன் தெருவில் உள்ள ஒரு வீட்டு குழாயில் பெண்கள் பாத்திரத்தில் குடிநீரை பிடித்தனர். அப்போது மீன் குஞ்சு உயிருடன் இருந்தது.

அப்பகுதியைச் சேர்ந்த கலந்தர் கூறியதாவது: சில நாட்களாகவே பேரூராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் மீன் குஞ்சுகள் வந்த வண்ணம் உள்ளன. குடிக்க பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திருவாடானை, தினையத்துார், காடாங்குடி வழியாக வரும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் ஆங்காங்கே சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கண்மாய் ஓரங்களில் கால்வாய் வழியாக செல்லும் குழாய்களில் மீன் குஞ்சுகள் புகுந்து வந்திருக்கலாம் என்ற கோணத்தில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அங்கே பாம்புஇங்கே மீன் குஞ்சு



திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லுாரில் மாரியப்பன் என்பவரது வீட்டு குழாயில் தண்ணீர் பாம்பு வந்த நிலையில் தொண்டி பேரூராட்சி குழாய் குடிநீரில் மீன்குஞ்சு வந்துள்ளது.

Advertisement