செம்பாக்கம்-மானாமதி சாலையில் தரைப்பாலம் அமைப்பது அவசியம்

திருப்போரூர்:செம்பாக்கம்-மானாமதி சாலையில், மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற நிரந்தர தீர்வாக, தரைப்பாலம் அமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தில் இருந்து, அச்சரவாக்கம் கிராமம் வழியாக, மானாமதி கிராமத்திற்குச் செல்லும், 5 கி.மீ., சாலை உள்ளது.

அச்சரவாக்கம் ஏரி உபரி நீர், மேற்கண்ட சாலையைக் கடந்து செல்கிறது. இதற்காக உபரி நீர் செல்லும் சாலையில், பல ஆண்டுகளுக்கு முன், 50 அடி நீளத்தில் தாழ்வான கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.

பருவ மழை மற்றும் பேரிடர் காலங்களில், உபரி நீர் சாலையைக் கடந்து செல்லும்.

தாழ்வான கான்கிரீட் சாலை, நாளடைவில் சேதமடைந்துள்ளது. இதனால், அங்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

மேலும், அங்கு அபாய வளைவுப் பகுதியாக இருப்பதாலும், சாலை சேதமடைந்து இருப்பதாலும், விபத்து அதிகரிக்கும் சூழல் உள்ளது.

எனவே, அச்சரவாக்கம் கிராமத்தில், சாலையைக் கடந்து செல்லும் தண்ணீருக்கு ஏற்ப, நிரந்தர தீர்வாக தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிபார்க்கின்றனர்.

Advertisement