சோழிங்கநல்லுார் போக்குவரத்து ஆபீசில் அதிகாரிகள் இல்லாததால் அலைக்கழிப்பு

சோழிங்கநல்லுா:ஓ.எம்.ஆரில் உள்ள சோழிங்கநல்லுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், தினமும் 70 பேர் ஓட்டுனர் உரிமம், 80 பேர் பழகுனர் உரிமம் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். 50 பேர், தங்கள் வாகனங்களுக்கு தகுதி சான்று கேட்கின்றனர்.

மேலும், 200 புது வாகனங்கள் பதிவாகின்றன. இதோடு, விபத்து வாகனங்கள், பள்ளி வாகனங்கள் ஆய்வு, அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட பணிகள், இந்த அலுவலகத்தில் நடக்கின்றன.

ஓ.எம்.ஆரில் ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக உள்ளதால், முகவரி மாற்றம், வாகனங்கள் பெயர் மாற்றம் போன்ற விண்ணப்பங்கள் அதிகம்.

மேற்கண்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும், வட்டார போக்குவரத்து அதிகாரி மற்றும் ஆய்வாளர் ஒப்புதல் தேவை.

தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் செய்யும் இந்த இரு அதிகாரிகள் பணியிடம், ஒன்றரை மாதமாக காலியாக உள்ளது.

அலுவலகத்தில் நிர்வாக பணி மேற்கொள்ளும் நேர்முக உதவியாளர், வட்டார போக்குவரத்து அதிகாரியின் பணியை கூடுதலாக கவனிக்கிறார்.

வாகனங்கள் ஆய்வுக்கு, தாம்பரம், மீனம்பாக்கம், திருவான்மியூர் ஆகிய அலுவலகங்களில் இருந்து, சுழற்சி முறையில் ஒரு ஆய்வாளர் வருகிறார்.

அவரும் தாமதமாக வருவதால், ஓட்டுனர் உரிமம், வாகனம் புதுப்பிப்பு, தகுதி சான்று, விபத்து வாகனங்கள் ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்காக விண்ணப்பித்தவர்கள், அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இது குறித்து, விண்ணப்பதாரர்கள் கூறியதாவது:

இதற்கு முன், பகல் 12:00 மணிக்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும். அரை நாள் விடுப்பு எடுத்து, பணிக்கு சென்று விடுவோம்.

இப்போது, ஆய்வாளர் வருகைக்காக மாலை வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஆய்வாளர் வராத போது, வாகனங்கள் ஆய்வு பணிகள் நடப்பதில்லை.

மறுநாள் மீண்டும் வர வேண்டும். இதனால், எங்கள் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இந்த அலுவலகத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஆர்.டி.ஓ., மற்றும் ஆய்வாளர் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆர்.டி.ஓ.,க்கள் பற்றாக்குறை, ஆய்வாளர்கள் ஆர்.டி.ஓ.,க்களாக பதவி உயர்வு பெற்றது போன்ற காரணங்களால், சில அலுவலகங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

- வட்டார போக்குவரத்து அதிகாரிகள்,சோழிங்கநல்லுார்.

Advertisement