ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ் கரைசல் கிடைக்குமா

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் விநியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.திருவாடானை, தொண்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் வெப்பம் தணிந்து வெயிலின் தாக்கம் தெரியாமல் போனது. ஆனால் மழை முடிந்தவுடன் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கியது.

கர்ப்பிணிகள், முதியவர்கள், பெண்கள் பகலில் வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர். அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைப்பதால் சுபநிகழ்ச்சிகளுக்கு செல்வதை கூட தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பகலில் வெளியே வருபவர்கள் மோர், இளநீர், சர்பத் ஆகிய குளிர்ந்த ஆகாரங்களை பருகுகின்றனர். இந்நிலையில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அலுவலகங்களில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் விநியோகிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஓ.ஆர்.எஸ்., கரைசல் மூலம் வெப்ப நிலையை எதிர்கொள்ள முடியும். இந்த கரைசலை மக்களுக்கு தெரியும் படி வெளிப்பகுதியில் வைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்வது குறித்த ஆலோசனைகளை சுகாதாரத்துறையினர் வழங்க வேண்டும் என்றனர்.

Advertisement