ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரத போராட்டம்

தர்மபுரி: பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கவுரன், தமிழக தமிழாசிரியர் கழக அமைப்பு செயலாளர் ஆனந்தன், ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சாமிநாதன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், அரசு பணியாளர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் பாஸ்கரன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பெஞ்சமின் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் காமராஜ் துவக்கி வைத்து பேசினார். ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ரக்ஷித் விளக்கி பேசினார்.

இதில், 2003க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொடக்க கல்வி துறையில் பணிபுரியும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறையில், 30 விழுக்காடு காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் அனைவருக்கும் மறுக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Advertisement