கொளப்பாக்கம் குப்பையால் விமானங்களுக்கு அச்சுறுத்தல் ஏர்போர்ட்டிற்குள் வலம் வரும் பறவைகளால் அபாயம்

குன்றத்துார் ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சியில், ஆங்காங்கே கொடப்படும் குப்பை கழிவுகளால் பறவைகள் அதிகமாக வருகின்றன. சென்னை விமான நிலையத்திற்குள் பறவைகள் புகுந்து, விமான இயக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆபத்து ஏற்படும் முன், இந்த அவலத்தை தடுக்க வேண்டும் என, விமான நிலைய அதிகாரிகளும், பொது மக்களும் வலியுறுத்துகின்றனர்.
சென்னை விமான நிலையம், மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது, அதை சுற்றி கவுல்பஜார், கொளப்பாக்கம், பொழிச்சலுார், தரைப்பாக்கம், மணப்பாக்கம் போன்ற பகுதிகள் உள்ளன. கொளப்பாக்கம் அண்ணா மெயின் ரோடு பின்புறத்தில் உள்ள காலி இடத்தில், அதிக அளவிலான பிளாஸ்டிக் குப்பை, மாமிச கழிவுகள், வீட்டு கழிவுகள் கொட்டப்படுகின்றன.
இதனால், கால்நடைகள் மற்றும் பறவைகள் அங்கு வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அருகில் உள்ள விமான நிலையத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. குறிப்பாக உணவு தேடி வரும் பறவைகள், எளிதில் விமான நிலைய ஒடுபாதை பகுதிக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
தரையிறங்கும் அல்லது பறக்கும் விமானங்களில் பறவைகள் மோதும் நிலை ஏற்பட்டால், விபத்து தவிர்க்க முடியாததாகி விடும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக விமான நிலையம் சுற்றியுள்ள இடங்களில், எவ்வித குப்பைகளையும் கொட்டக் கூடாது. அப்படி கொட்டினால் பறவைகள் எளிதாக உள்ளே வந்துவிடும்.
விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும் போதும் சிக்கலை ஏற்படுத்தும். இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளன.
இதற்காக, மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சில வழிகாட்டுதல்களை அமைத்துள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகள், விமான நிலையம் அருகில் குப்பை கொட்டக் கூடாது என, ஒவ்வொறு மாதமும் அழைத்து பேச்சு நடத்துகிறோம்.
அதையும் மீறி, கொளப்பாக்கம் ஊராட்சியில் இருந்து தினமும் டன் கணக்கில் குப்பையை, விமான நிலைய ஒடுபாதை பின்புறத்தில் உள்ள இடங்களில் கொட்டுகின்றனர். இதனால், அதில் கிடைக்கும் உணவுகளுடன் பறவைகள், விமான நிலையத்திற்குள் வருகின்றன.
ஆணையம் சார்பில் பறவைகளை விரட்டுவதற்கான ஆட்கள் நியமிக்கப்பட்டு, முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இருப்பினும் உள்ளாட்சி அமைப்புகள் ஒத்துழைப்பு இருந்தால் தான் இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது;
கடந்த சில மாதங்களாவே, மதிய மற்றும் இரவு நேரங்களில், வாகனங்களில் வருவோர், கொளப்பாக்கத்தின் பல இடங்களில், மூட்டை மூட்டையாக குப்பையை கொட்டிச் செல்கின்றனர்.
இதனால், அவ்வழியே செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. கால்நடைகள் ஆங்காங்கே மேய்வதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
கொளப்பாக்கம் ஊராட்சியில் சேகரிக்கும் குப்பையையும், ஊழியர்கள் இங்கேதான் கொட்டுகின்றனர்.
இதனால், நோய் பரவல், நிலத்தடி நீர் பாதிப்பு போன்ற பல பிரச்னைகள் ஏற்படும் சூழல் உள்ளது. பல முறை புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஊராட்சி மன்ற தலைவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏற்கனவே, சாலை பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, குப்பை கழிவுகள் பிரச்சனையும் அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
★ பறவைகள் விமான நிலையத்திற்குள் புகுந்தால், விமானங்களுடன் மோதி சிக்கல்களை ஏற்படுத்தும்★ பிளாஸ்டிக் மற்றும் பிற மெல்லிய பொருட்கள் காற்றில் பறந்து வந்து, விமானங்களின் புகை குழாய்களில் சிக்கி, தொழில்நுட்பப் பிரச்னைகளை உருவாக்கலாம்★ வெயில் காலங்களில் குப்பை தீப்பற்றி எரிந்தால் புகை ஏற்பட்டு, விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல்கள் ஏற்படும். பல விமான நிலையங்களில் இதுபோன்று நடந்துள்ளது★அதிகளவில் குப்பை சேரும்போது துர்நாற்றம் வீசும். இது பயணியருக்கு தொற்றுநோய் அல்லது சங்கடமான சூழலை உருவாக்கும்.***
- நமது நிருபர் -
மேலும்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!