வெப்பநிலை இன்று 4 டிகிரி அதிகரிக்கும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் மற்றும் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென்மாநில பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது.

பூமத்திய ரேகையை ஒட்டிய, இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வரும், 26 வரை இந்நிலை நீடிக்கும்.

தமிழகத்தில் ஒருசில பகுதிகளில், இன்று குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் வரையும், அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் வரையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை, 36 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, கரூர் மாவட்டம் கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.

Advertisement