அடிப்படை பணியாளர்களுக்கு எதிரான அரசாணை 325ஐ ரத்து செய்ய வேண்டும் மருத்துவமனை ஊழியர்கள் வலியுறுத்தல்

மதுரை: தமிழக மருத்துவத் துறையில் 2012 ல் வெளியிட்ட அரசாணை் 325, அரசு மருத்துவமனைகளில் 'டி' பிரிவு ஊழியர்களை நியமனம் செய்ய விடாமல் தடுக்கிறது. இந்த உத்தரவு அரசியல் சட்டத்துக்கு புறம்பாக உள்ளது.

இதனால் துாய்மைப் பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்களான செவிலிய உதவியாளர்கள், சலவை, சவரத் தொழிலாளர்கள், சமையல் பணியாளர் போன்ற அடிப்படை பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்ற எண்ணம் மருத்துவமனை ஊழியர்களிடம் உள்ளது.

இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை அனைத்து ஊழியர், சுகாதார பணியாளர் மற்றும் செவிலிய உதவியாளர் சங்கத்தினர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், அரசின் கொள்கை முடிவு இது என உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்தது.

'இந்த டி பிரிவு பணியிடங்களை காலியாக வைத்திருப்பது பொதுமக்கள் நலனுக்கு உகந்ததல்ல' என்று கருதிய சங்கத்தினர், அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியின்போது பத்தாண்டுகள், தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் 4 ஆண்டுகள் என 14 ஆண்டுகளாக இப்பிரிவில் பணியாற்ற வேண்டியவர்கள் வாய்ப்பின்றி பாதிக்கப்படுகின்றனர். எனவே மேற்கண்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர்.

அடுத்து சுகாதார, துாய்மை, மருத்துவமனை பணியாளர்களை 'பன்னோக்கு மருத்துவ பணியாளர்கள்' ('மல்டி பர்பஸ் ஆஸ்பிடல் ஒர்க்கர்) என்றும் 325 அரசாணை கூறுகிறது. இந்த பெயரை துாய்மைப் பணியாளர் என பெயர் மாற்றம் செய்யவும் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

காரணம், மற்ற துறைகளில் சுகாதார பணியாளர்களை துாய்மைப் பணியாளர்களாக மாற்றி அரசாணை வெளியிட்டு அதற்கான பலனை பெறுகின்றனர். அதுபோல பன்னோக்கு மருத்துவ பணியாளரை 'துாய்மைப் பணியாளர்' என மாற்றினால்தான் அவர்களுக்கும் பணியில் ஓய்வு, இறப்பு காலங்களில் பணபலன் கிடைக்கும் என்பதால் அரசாணை 325ஐ எதிர்க்கின்றனர்.

சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடாசலம் கூறுகையில் ''தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் இவ்வகையில் உள்ளனர். இவர்களின் ஓய்வுக்கு பின் அவுட்சோர்ஸிங் மூலம் நியமனம் செய்கின்றனர். இந்தப் பணியாளர்கள் பத்தாண்டுகளை கடந்தும் தினக்கூலியை தவிர வேறெந்த பயனும் அடைய முடியவில்லை.

அவர்களை துாய்மைப் பணியாளர் என பெயர் மாற்றினாலாவது அதற்கான வாரியம் மூலம் பலன் கிடைக்கும். எனவே அரசாணை 325ஐ உடனே ரத்து செய்து கடைநிலை ஊழியர்களை பாதுகாக்க வேண்டும்'' என்றார்.

Advertisement