'ஒவ்வொரு மாவட்டத்திலும் கர்ப்பிணியருக்கு வளைகாப்பு'

பெலகாவி: ''அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்,'' என, மாநில மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.

பெலகாவி மாவட்ட நிர்வாகம், மாவட்ட பஞ்சாயத்து, பெண்கள், குழந்தைகள் நலத்துறை சார்பில் நடந்த சர்வதேச மகளிர் தின விழாவின் ஒரு பகுதியாக, நேற்று 3,000 கர்ப்பிணியருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விழாவை துவக்கி வைத்து அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பேசியதாவது:

நம் கலாசாரம், பெண்களுக்கு உயர்ந்த இடத்தை அளித்துள்ளது. தாய்மை என்பது மிகப்பெரிய கவுரவம். பழங்காலத்தில் இருந்தே நாம், பெண்களை தெய்வமாக போற்றி வருகிறோம். தாயே முதல் ஆசிரியை என்றும் அழைக்கிறோம்.

ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது சமூகத்தின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி. குழந்தையை இந்த சமூகத்தின் சொத்தாக வளர்க்க, இந்த சடங்குகள் அவசியம். ஒரு குழந்தை நல்ல குடிமகனாகவும், சமூகத்திற்கு சொத்தாகவும் மாற வேண்டும்.

தாய்மையின் பொறுப்பை மிகுந்த விசுவாசம், அக்கறை, பொறுப்புடன் கையாளுங்கள். குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தை கற்றுத்தந்து வளர்க்க வேண்டும்.

மகாபாரதத்தில் சுப்தரா கர்ப்பமாக இருந்தபோது, கிருஷ்ணர் அவரை பார்க்க வருகிறார். 'சக்ரவியூகம்' குறித்து சொல்ல துவங்குகிறார். இதை கேட்டுக் கொண்டே சுபத்ரா உறங்கிவிடுகிறார்.

ஆனால், அவர் வயிற்றில் வளர்ந்த குழந்தை 'ஹும் சொல்லுங்கள்...' என்றது. இதை கேட்ட கிருஷ்ணர், வயிற்றில் வளர்வது சாதாரண குழந்தை அல்ல என்று உணர்கிறார்.

அபிமன்யு கருவாக இருக்கும்போதே, கிருஷ்ணர் சொன்ன சக்ரவியூகம் என்ற மாபெரும் போர்க்கலையை கற்றுக் கொண்டார். எனவே கர்ப்ப காலத்தில் பார்வை, கேட்கும் திறன் இரண்டும் நன்றாக இருக்க வேண்டும். அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த அரசு உத்தரவு பிறப்பிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement