புதுச்சேரி மதுபானம் கடத்திய நான்கு பேர் கைது

செங்கல்பட்டு, : அச்சிறுபாக்கம் பகுதியில், புதுச்சேரி மதுபானங்களை கடத்தி வந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.

மதுராந்தகம் காவல் துணை கோட்டத்திற்கு உட்பட்ட அச்சிறுபாக்கம், சூணாம்பேடு, மணப்பாக்கம், வேலுார் ஆகிய கிராமங்களில், புதுச்சேரி மதுபானம் விற்பனை அதிகமாக நடைபெறுவதாக, மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் அச்சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை உதவி கமிஷனர் ராஜன்பாபு, தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் அச்சிறுபாக்கம் மதுவிலக்கு போலீசார், நேற்று முன்தினம் சூணாம்பேடு பகுதியில், திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, சூணாம்பேடு இணியவன், 43, ரூபாவதி, 36, மணப்பாக்கம் வெண்ணிலா, 50, வேலுார் அஞ்சலை, 45, ஆகியோரை மடக்கிப் பிடித்து சோதனை செய்த போது, புதுச்சேரி மதுபானம் 82 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, அச்சிறுபாக்கம் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நான்கு பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement