வீடு வீடாக சென்று போதைப்பொருள் பயன்படுத்துவோர் கணக்கெடுப்பு: பஞ்சாப் அரசின் புது திட்டம்

5

சண்டிகர்: மாநிலம் முழுவதும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் குறித்த கணக்கெடுப்பை நடத்த பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

பஞ்சாப்பை ஆளும் ஆம்ஆத்மி அரசு, 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தது. மொத்தம் ரூ.2.36 கோடி மதிப்பிலான இந்த பட்ஜெட்டில் ரூ.5,698 கோடி மருத்துவ திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்ஜெட்டில் எந்த புதுவிதமான வரிகளும் சுமத்தப்படவில்லை. அதேபோல, தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1,000 உதவி தொகை குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


அதேவேளையில், மாநிலம் முழுவதும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் குறித்த கணக்கெடுப்பை நடத்த பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் ஹர்பல் சிங் சீமா, தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், செழிப்புக்கும் போதைப்பொருள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. எனவே, போதைப்பொருளுக்கு எதிராக மிகப்பெரிய போரை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். ஆயுதங்கள் மற்றும் படைகளின் மூலமாக இந்தப் போரை நாங்கள் முன்னெடுக்கவில்லை. தரவுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம்.


இதற்காக, போதைப் பொருள் பயன்படுத்துவோர் குறித்த கணக்கெடுப்பை அடுத்த நிதியாண்டில் நடத்த முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு வீடாகச் சென்று, போதைப் பொருளை பயன்படுத்துவர்களின் விபரங்களை சேகரிக்க உள்ளோம். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ஒரு பயனுள்ள மற்றும் அறிவியல் பூர்வமான உத்தியை உருவாக்க இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement